தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில் திருச்சுற்றுக்கு வெளியே கோட்டை கொத்தளச்சுவரின் மேற்குப்பகுதியில் ஆயிரம் ஆண்டு விழாவுக்காக புதர்களை அகற்றும் பணி நடக்கிறது. அப்பகுதியில் இதுவரை கண்டறியப்படாத ராஜராஜசோழன் காலத்து கல்வெட்டு ஒன்றும், நாயக்கர் காலத்து கல்வெட்டு ஒன்றும் வெளிப்பட்டுள்ளது. இதுபற்றி, தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சோழர் காலத்து கல்வெட்டு, முன்பு பெரிய கோவிலின் தூண் ஒன்றில் இடம் பெற்றிருந்தது.
பின்னாளில் நாயக்கர் காலத்தில் கோட்டைச் சுவரில் இடம் பெற்றுள்ளது.புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில், "உமாபரமேஸ்வரியார் திருமேனி ஒன்று ரத்தின யாசம் செய்து இவர் எழுந்தருளி நின்ற இருவிரல் ஆறு தோரை உசரம் உள்ள பத்மம்,' என்ற வாசகம் காணப்பட்டது.மாமன்னன் ராஜராஜசோழன் காலத்தில்தான் சிவாலயங்களில் தனித்து அம்மன் கோவில் எடுக்கும் வழக்கம் தோன்றியது. அப்போது, கோவிலின் வடக்கு திருச்சுற்று மண்டபத்தில் உள்ள கல்வெட்டில், "திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து உமாபரமேஸ்வரியார் கோவில் இருந்ததாக,' குறிப்பிட்டுள்ளனர்.அந்த உமாபரமேஸ்வரியார் கோவிலுக்கு என ராஜராஜனால் செம்பில் வார்த்து அளிக்கப்பட்ட உமாபரமேஸ்வரியார் உருவச்சிலை பற்றிய தகவல் புதிதாக கண்டறியப்பட்ட கல்வெட்டுக்குறிப்பு தெரிவிக்கிறது.இங்கு கண்டுபிடிக்கப்பட்ட நாயக்கர் கால கல்வெட்டில், "மனத்துணை சதாசேவை,' எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. மனத்துணை என்ற நபர் எப்போதும் இறைவனுக்கு தொண்டு செய்பவராக விளங்கினார் என்பது இக்கல்வெட்டு குறிப்பின் பொருளாகும்.மேலே கண்ட இக்கல்வெட்டுகளும் தஞ்சை பெரிய கோவில் வரலாறு அறியவும், செப்புச்சிலை பற்றி அறியவும் துணை செய்பவையாகும்.இவ்வாறு குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.