நமக்கு எல்லாம் உத்திரமேரூர் கல்வெட்டு பற்றி நன்கு தெரியும். சிலருக்கு மானூர் கல்வெட்டும் தெரிந்திருக்கும். சிலர் சங்க இலக்கியங்களிலேயே குடவோலை முறை இருந்திருக்கிறது என்றும் கூறுவார்கள்.
பல நேரங்களில் உத்திரமேரூர் கல்வெட்டை எடுத்துக் கொண்டு அதில் எல்லாருக்கும் தேர்தலில் நிற்கும் உரிமை கிடையாது என்றும் சிலர் வாதாடுவது கூட உண்டு.
இப்போது இந்த 33 % இட ஒதுக்கீடு பற்றி எல்லாம் கூட விவாதம் எல்லாம் நடக்கிறது.
நம் தமிழகத்தில் பெண்கள் முக்கிய பதவிகளில் இருந்து வந்திருக்கிறார்கள். அதிலும் ஊர் சபையின் தலைவர்களாகவும்இருந்திருக்கிறார்கள்.அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் இது.
நீதிபதியும் மனைவியும்
கல்வெட்டு உணர்த்தும் வியப்பான செய்தியொன்று - தெள்ளாற்றில் ஒரு நாள் மாலையில் குளத்திலிருந்து குடிநீர் கொண்டு வீடு திரும்பிய பெண்களை, குடித்து களித்திருந்த ஒருவன் கேலி செய்து பழிச்சொல் சொல்லி ஏசினான். அப்பெண்கள் ஊராண்மைக் கழக நீதிமன்றத்தில் முறையிட்டனர். வழக்கு விசாரிக்கப்பட்டு தவறு செய்தவனுக்கு திருமூலட்டான நாதர் கோயிலில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு திருவிளக்கு ஏற்றுமாறு தீர்ப்பு உரைத்து (அவன் செய்த தவறுக்கு பிராயசித்தம் கிடைக்கும் பொருட்டு) தண்டனை தரப்பட்டது. இத்தண்டனையைத் தந்த நீதிபதியே அவன் மனைவிதான். ஒருநாள் அவனுக்குப் பதிலாக மனைவி நெய் எடுத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்றாள். அதைக் கண்ட பெண்ணொருத்தி அவளைக் கேட்க, "ஊராண்மைக் கழகத் தலைவி - நீதிபதி என்ற முறையில் குற்றம் செய்தவருக்குத் தண்டனை தந்தேன்; இப்போது மனைவி என்ற முறையில் அவருக்காக அவர் செய்யவேண்டிய பணியை நான் செய்கிறேன் இதில் என்ன தவறு?" என்று அவள் சொன்னாளாம். ஊர் மக்கள் அவளை "குடிக்குறை தீர்த்த நாச்சியார்" என்று கொண்டாடினார்கள். அவளது உருவச்சிலை இப்போது இல்லை.ஆனால் கல்வெட்டும், அவள் உருவம் இருந்த இடத்தில அவள் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் தெள்ளாற்றில் படி எடுக்கப்பட்டுள்ளது.
இது இரண்டாம் பாண்டியர் ஆட்சிக் காலத்து 13 ஆம் நூற்றாண்டு நிகழ்வு.