பொன்னியின் செல்வன், ஏன் சினிமா தேவை?

நன்றி – எழுத்தாளர் ஜெயமோகன். சுட்டி https://www.jeyamohan.in/166897/

அ.பொன்னியின் செல்வன் நாவலை ஏன் சினிமாவாக எடுக்கவேண்டும்?

ஐயத்துக்கு இடமில்லா ஓர் உண்மை, பொன்னியின் செல்வன்தான் தமிழிலேயே அதிகமாக வாசிக்கப்பட்ட நாவல். சரி, உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் விசாரித்துப் பாருங்கள் இதுவரை பொன்னியின் செல்வன் வாசித்தவர்கள் எவரெவர் என. கதையாவது கேட்டவர்கள் எத்தனை பேர் என? திகைப்படைவீர்கள். மிகமிகக்குறைவாகவே அதை வாசித்திருப்பார்கள். இளைய தலைமுறை கேள்விப்பட்டே இருக்காது

பொன்னியின் செல்வன் இதுவரை ஐந்து லட்சம் பிரதிகள் விற்றிருக்கும். பத்துலட்சம் பேர் படித்திருப்பார்கள். தமிழக மக்கள் தொகை பத்துகோடிக்கும் மேல். உலகளவில் பன்னிரண்டு கோடி. ஆகவே அந்நாவலை படித்தவர்கள் தமிழ்மக்களிலேயே மிகமிகச்சிறுபான்மையினர்தான்.

இது தமிழகத்தின் கதை. தமிழகத்துக்கு வெளியே ராஜராஜ சோழன் என்ற பெயர், சோழ அரசகுடி என்ற பெயர் பெரும்பாலும் எவருக்குமே தெரியாது. அது மிக இயல்பானது. ஏனென்றால் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அவர்களுக்குரிய பல பேரரசுகள் உள்ளன. ராஷ்டிரகூடப் பேரரசு அல்லது கீழைச்சாளுக்கியப் பேரரசு பற்றி நமக்கு என்ன தெரியும்?

பள்ளி,கல்லூரிகளில் பெயர்கள் மட்டும் அறிமுகமாகின்றன. அவ்வாறு பிற அரசுகள் பற்றிச் சொல்வதில் நமக்கு துணைத்தேசியம் சார்ந்த உளத்தடைகள் பல உண்டு.  சோழர்கள் இருநூற்றைம்பது ஆண்டுக்காலம் ஆட்சி செய்த நிலம் கேரளம்.கேரளத்தில் பின்னாளில் உருவான ஐம்பத்தாறு அரசுகள் (நாடுகள்) என்னும் அமைப்பு சோழர்காலத்தில் உருவானது. அதன் சிற்றரசர்கள் நாடுவாழிகள். அவர்களின் கூட்டமைப்பே சோழர்களுக்குப் பின் திருவிதாங்கூர், கொல்லம், கொச்சி ,கோழிக்கோடு அரசுகளாகியது. சோழர் காலகட்டத்தில் கட்டப்பட்ட ஆலயங்கள், வெட்டப்பட்ட ஏரிகள் பலநூறு கேரளத்தில் உள்ளன

ஆனால் கேரளத்தில் பொதுவாக வர்லாறு பற்றிப் பேசுபவர்களுக்குக்கூட சோழர்கள் பற்றி தெரியாது. கேரள பாடநூல்களில் சோழர்கள் பற்றி பெரிதாக ஏதுமில்லை. கேரள வரலாற்றையே பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் அவர்கள் சோழர்களின் வரலாற்றை தவிர்க்க நினைக்கிறார்கள். நாம் தமிழகத்தை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களின் வரலாற்றை பொதுப்போக்காகத்தானே அறிந்து வைத்திருக்கிறோம். நாயக்க மன்னர்கள் வெட்டிய ஏரிகளும், உருவாக்கிய சாலைகளும் சந்தைகளும்தான் இன்றைய தமிழ்நாடு. ஆனால் நாம் கண்டுகொள்வதில்லை. நான் தமிழகத்துக்கு வெளியே எவரிடம் பேசினாலும், அறிஞர்களிடமும் இலக்கியவாதிகளிடமும் பேசும்போதுகூட, சோழர்கள் என்று சொன்னால் மேலும் கூடுதலாக ஒரு ஐந்து நிமிடம் அவர்கள் எவர் என விளக்கவேண்டியிருக்கிறது.

இச்சூழலில் வருகிறது பொன்னியின் செல்வன்.ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என்றால் தேசிய அளவில் மட்டுமல்ல, உலகளவிலேயே கூட பலகோடி பேருக்கு சோழர்களை, தமிழ்வரலாற்றின் ஒளிமிக்க பகுதியைக் கொண்டுசென்று சேர்த்துவிடும். நாம் அதன்பின் விளக்கவேண்டிய தேவையே இருக்காது. பொன்னியின் செல்வனின் சொல்லப்பட்ட சோழநாடு என ஒரு வரி சொன்னாலே போதும். ஆகவேதான் பொன்னியின் செல்வன் சினிமாவாக எடுக்கப்பட்டாகவேண்டும்.

ஆங்கிலம் வழியாக கல்விகற்று, உலகமெங்கும் சிதறிக் குடியேறிக்கொண்டிருக்கும் நம் அடுத்த தலைமுறைக்கு பொன்னியின் செல்வன் என்னும் ஒரு படம் ஒட்டுமொத்த சோழர் வரலாற்றையும் அறிமுகம் செய்துவிடும். தேவை என்றால் அவர்கள் நாவலை படிக்கலாம். மேலும் வரலாற்று நூல்களை வாசிக்கலாம். நீங்களே கவனியுங்கள், நம் அடுத்த தலைமுறை இன்று தமிழுடன் கொண்டிருக்கும் ஒரே தொடர்பு சினிமாதான். புலம்பெயர்ந்தோர் குழந்தைகள் தமிழ்ப்பேச்சை காதில் வாங்குவதே சினிமா வழியாகத்தான். ஆகவேதான் பொன்னியின் செல்வன் சினிமாவாக எடுக்கப்பட்டாகவேண்டும்.

ஏன் திரைப்படமாக எடுக்கவேண்டும்? தொலைத்தொடராக எடுக்கலாமே? சினிமாவாக எடுத்தால், எப்படி எடுத்தாலும் அத்தனை பெரிய நாவலை சுருக்காமலிருக்க முடியாது.தொலைத்தொடராக எடுக்கலாம். ஆனால் அதற்கு முதலீடு கிடைக்காது. வெறும் ‘காஸ்ட்யூம் டிராமா’வாகவே எடுக்க முடியும். சினிமா தவிர எந்த ஊடகத்திற்கும் சோழர்காலத்தை சித்தரித்துக் காட்டும் அளவுக்கு முதலீடு அமையாது.

மேலும், ஏற்கனவே பொன்னியின் செல்வன் பற்றி அறிந்தவர்களுக்குத்தான் தொலைத்தொடரோ, காமிக்ஸ் வடிவமோ ஈர்ப்பை அளிக்கும். இன்னமும் பொன்னியின் செல்வன் அல்லது சோழர்கள் பற்றி எதுவுமே தெரியாதவர்களை சினிமா மட்டுமே ஈர்க்க முடியும். பிற ஊடகங்கள் பொன்னியின் செல்வன் என்னும் நாவலின் புகழை தங்களுக்கு பயன்படுத்திக் கொள்பவை. சினிமா மட்டுமே பொன்னியின் செல்வன் என்னும் நாவலுக்கு தன் புகழை அளிப்பது.

எண்ணிப்பாருங்கள், பொன்னியின் செல்வன் நாவலின் புகழ் என்பது தமிழகத்துக்குள் மட்டுமே. அதிலும்கூட தமிழகத்தில் பெரும்பான்மையினருக்கு அந்நாவலை பற்றி ஒன்றுமே தெரியாது. பொன்னியின் செல்வன் சினிமா பலகோடி ரூபாயை விளம்பரத்துக்காகச் செலவிடுகிறது, இன்னும் பலகோடி செலவிடப்படவிருக்கிறது. உலகம் முழுக்க. அது நாவலை ஆயிரம் மடங்கு மக்களிடையே கொண்டுசெல்கிறது. அது சினிமாவால்தான் இன்றைய சூழலில் முடியும்.

சோழர்காலப் பெருமையைச் சொல்கிறோம், ராஜராஜனின் புகழைச் சொல்கிறோம் என்றால் தமிழகத்திலேயே அடுத்த தலைமுறையினர் பொருட்படுத்த மாட்டார்கள். தமிழகத்துக்கு வெளியே உள்ளவர்களிடம் அப்படி ஒரு பேச்சையே எடுக்க முடியாது. அகன்ற காட்சிகள், நாடகீயத்தன்மை, சாகசங்கள் ஆகியவை கொண்ட ஒரு பொழுதுபோக்கு சினிமா என்ற அளவிலேயே பொன்னியின் செல்வன் மக்களிடையே தன்னை முன்வைக்க முடியும். அதன்பொருட்டு வந்து அமர்பவர்களிடமே அது சோழர்களின் உலகை விரித்துக் காட்டமுடியும்.

ஏன் சினிமா தேவைப்படுகிறது? இது காட்சியூடகத்தின் உலகம்.நாம் இளமையில் பார்த்ததை விட பத்து இருபது மடங்கு இன்றைய தலைமுறை காட்சியூடகங்களை பார்க்கிறது. நாம் மாதம் ஒருமுறை திரையரங்கு சென்று சினிமா பார்த்தோம். கைபேசியில் சினிமா ஓடும் காலம் இது. இன்று எந்த ஒன்றும் காட்சியூடகமாக ஆகவில்லை என்றால் பொதுப்பிரக்ஞையில் நீடிக்காது. நேற்றைய தலைமுறையில் அச்சு ஊடகமே முதன்மையானது. தொடர்கதைகளை முண்டியடித்து வாசித்த காலம் அது. அது போய்விட்டது. ‘எதுவானாலும் காட்டு’ என்பதே இன்றைய தலைமுறையின் கோரிக்கை. ஆகவே பொன்னியின் செல்வன் சினிமாவாக ஆகியே தீரவேண்டும்.

ஒவ்வொரு சமூகத்துக்கும் அதன் இறந்தகாலம் பற்றிய கனவு தேவைப்படுகிறது. அந்தக்கனவு மிக இளமையிலேயே அச்சமூக உறுப்பினர்களுக்கு அளிக்கப்படுகிறது. அது அவர்களின் ஆழத்தில் வளர்கிறது. அந்தக் கனவையே இலக்கியங்கள் உருவாக்குகின்றன. அவை அக்கனவின் வழியாகவே தலைமுறைகளை இணைத்து பண்பாட்டுத் தொடர்ச்சியை உருவாக்குகின்றன. பண்பாடு என நாம் சொல்வதே நம் முந்தைய தலைமுறையிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டு நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் நினைவுகளையும் கனவுகளையும்தான். வரலாறு, தொன்மம் ஆகியவை இதன்பொருட்டே உருவாக்கப்படுகின்றன.

ஐரோப்பிய, அமெரிக்கச் சமூகங்களையே பாருங்கள். அவர்கள் அதிநவீனச் சமூகம். ஆனால் தங்கள் கிரேக்க, கெல்டிக், நார்ஸ் பாரம்பரியத்தை குழந்தைக்கதைகளாக, சினிமாக்களாக, காமிக்ஸ்களாக அடுத்த தலைமுறைக்கு அளித்தபடியே இருக்கிறார்கள். தோர் ( Thor ) என தேடிப்பாருங்கள். அது ஒரு நார்ஸ் தொன்மம். இடிமின்னலின் கடவுள். நம்முடைய இந்திரன் போல. உங்கள் குழந்தைகளிடம் அவர் யார் என்று கேளுங்கள். அவர்களிடமே பொம்மை இருக்கும். அவ்வளவு சினிமாக்கள், அத்தனை காமிக்ஸ் படங்கள்.

ஐரோப்பாவின் தொல்காலகட்டம் முழுக்க சினிமாக்களாக அந்த மக்களிடையே சென்றுகொண்டே இருக்கிறது. அவர்களுக்கு இருக்கும் செல்வ வளத்தால், ஊடக வல்லமையால் உலகம் முழுக்க கொண்டுசெல்கிறார்கள். இந்திரன் எவர் என்று தெரியாத நம் குழந்தைக்கு தோர் வைத்திருக்கும் சுத்தியலின் பெயர் என்ன என்று தெரிந்திருக்கும். உலகம் முழுக்க உள்ள குழந்தைகள் ஐரோப்பியப் பண்பாடு நோக்கி அந்தச் சினிமாக்களால் ஈர்க்கப்படுகிறார்கள். கொஞ்சம் கல்வி கற்றதும் அங்கே சென்றுவிடத் துடிக்கிறார்கள்.அச்சமூகத்துடன் மிக எளிதாக இணையவும் அவர்களால் முடிகிறது. ஐரோப்பியச் சமூகத்தை, அமெரிக்கச் சமூகத்தை இன்று ஒருங்கிணைத்து வைத்திருப்பது, உலகமெங்குமிருந்து மக்களை அதைநோக்கி ஈர்த்து அதை மேலும் வல்லமையானவையாக ஆக்குவது அவர்களின் இந்த வரலாறும் தொன்மமும் உருவாக்கும் கனவுதான்.

இன்று உலகவல்லமையாக எழுந்து வரும் சீனா முதலில் செய்வது அவர்களின் வரலாற்றையும் தொன்மங்களையும் மாபெரும் சினிமாக்களாக எடுத்து அவர்களின் குழந்தைகளுக்கும், உலகம் முழுக்கவும் கொண்டுசெல்வதுதான்.கோடிக்கணக்கான செல்வத்தை அதன்பொருட்டு சீனா செலவிடுகிறது. உலகம் முழுக்க படையெடுப்பாளனாக, பேரழிவாளனாக அறியப்பட்ட ஜெங்கிஸ்கானை ஒரே சினிமா வழியாக சீனா  கதாநாயகனாக ஆக்கிவிட்டது. ஜெங்கிஸ்கானின் வரலாற்றைச் சொல்லும் சீனப்படமான மங்கோல் Mongol (film) உலகமெங்கும் பெருவெற்றி அடைந்த மாபெரும் சினிமா.

சீனா தன்னுடைய வரலாற்றையும் தொன்மங்களையும் சினிமா வழியாக உலகமெங்கும் கொண்டு செல்கிறது. அதற்காக ஹாலிவுட் இயக்குநர்களை கொண்டுவந்து, கோடிக்கணக்கான முதலீட்டை இறக்கி, சினிமா எடுக்கிறது. மிகச்சிறந்த உதாரணம் ரெட் கிளிஃப் Red Cliff (film)  ஹாலிவுட் இயக்குநர் ஜான் வூ வை கொண்டுசென்று அப்படத்தை இயக்கிநர். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், உலகமெங்கும் கொண்டுசென்றனர். அந்த படம் உலக சினிமாவின் மாபெரும் திரைநிகழ்வுகளில் ஒன்று.

அதன் நோக்கம் மூன்று. ஒன்று சீனமக்களிடையே, அவர்களின் அடுத்த தலைமுறையில், சீனா பற்றிய பெருமிதத்தை உருவாக்குவது. சீனா பெரும்பேரரசாக இருந்தது என ஆழமாக அவர்களின் உள்ளத்தில் நிறுவுவது. அந்த பொதுக்கனவே சீனாவை ஒருங்கிணைக்கும் ஆற்றல். இரண்டாவது, சீனா பற்றிய ஒரு மதிப்பை ஐரோப்பிய, அமெரிக்கச் சூழலில் உருவாக்குதல். எப்படி ஹாலிவுட் படம் பார்த்து நாம் ஐரோப்பியப் பண்பாடுமேல் பிரமிப்பு கொள்கிறோமோ அதே பிரமிப்பை அவர்களிடம் சீனா பற்றி உருவாக்குதல்.

அனைத்தையும் விட முக்கியமானது, கிழக்கு முழுக்க பரவியிருக்கும் மஞ்சளின மக்களிடம் சீனப்பெருமிதத்தை நிறுவுதல். அவர்களுக்கு ஏற்கனவே ஐரோப்பியப் பண்பாடு பற்றி பிரமிப்பும் தாழ்வுணர்ச்சியும் உண்டு. இந்த படங்கள் அதற்கு மாற்றாக அமைகின்றன. நாமும் குறைந்தவர்கள் அல்ல என எண்ணச் செய்கின்றன.சீனாவை தங்கள் இனத்தின் மையமாக எண்ண செய்கின்றன.

உண்மையில் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பலநூறு ஆண்டுகளாக சீனா மேல் இளக்காரமோ வெறுப்போதான் இருந்தது. அங்கு வாழும் பல லட்சம் பேர் சீனாவில் அரசியல் காரணங்களுக்காக தப்பி வந்தவர்கள். பல நாடுகள் சீன ஆக்ரமிப்பில் இருந்த வரலாறு  கொண்டவை. ஆனால் இன்று அந்த இளக்காரம் அகன்றுவிட்டிருக்கிறது. இன்று சீனா அவர்கள் அனைவருக்கும் தலைமைப்பொறுப்பு ஏற்கக்கூடியதாக ஆகிவிட்டிருக்கிறது. அடுத்த தலைமுறை உள்ளத்தில் அந்த எண்ணத்தை உருவாக்கியதுல் பெரும்பங்கு சீன சினிமாவுக்கு உண்டு.

இந்தப்போட்டியில் எங்கும் நாம் இல்லை. நமக்கு அந்த அளவுக்கு பணம் இல்லை. அந்த அளவுக்குச் செல்வாக்கும் இல்லை. ஆனால் நமக்கும் ஒரு பொற்கால வரலாறு இருந்தது, நாமும் வெற்றிபெற்ற சமூகமாக இருந்தோம் என நம் இளையதலைமுறைக்கும், இந்தியாவுக்கும், உலகுக்கும் சொல்வதற்கான ஒரு முயற்சி பொன்னியின் செல்வன். இதை நாம் சொல்லித்தான் ஆகவேண்டும். ஒரு சமூகமாக நீடிக்க, ஒரு பொதுக் கனவை நம் அடுத்த தலைமுறைக்குக் கையளிக்க.நம் முன் உள்ள பெரும் சவால் அது.

ஆகவேதான் பொன்னியின் செல்வன் சினிமாவாக ஆக்கப்படவேண்டும். உலகமெங்கும் கொண்டுசெல்லப்பட்டாகவேண்டும்

நன்றி – https://www.jeyamohan.in/166897/

பொன்னியின் செல்வன் பற்றிய அடுத்த வினாவே பொன்னியின் செல்வன் சினிமா எப்படி இருக்கும் என்பது. பொன்னியின் செல்வன் நாவல் ஒரு பெரிய சினிமாவாக எடுக்கப்பட்டு இந்தியாவெங்கும், உலகமெங்கும் கொண்டுசெல்லப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டவர்களுக்காகவே மேலே பேசமுடியும்.

பொன்னியின் செல்வன் ஒரு தூய கிளாஸிக், அதை தொடவே கூடாது, அது எவருக்கும் தெரியாமலேயே இருந்தால்கூட பரவாயில்லை, தமிழர்களின் ஒரு பொற்காலகட்டம் எவர் கவனத்துக்கும் வராமலிருந்தாலும் பரவாயில்லை எனச் சொல்பவர்கள் சிலர் உண்டு. அவர்களைப் பொறுத்தவரை பொன்னியின் செல்வனோ, ராஜராஜ சோழனோ, தமிழர் பண்பாடோ முக்கியமே இல்லை. அவர்கள் தங்கள் இளமையில் வாசித்து அடைந்த ஒரு கனவு அந்நாவல். அக்கனவை அப்படியே பொத்தி வைத்துக் கொள்வது மட்டுமே அவர்களின் நோக்கம். அது ஒரு தனிப்பட்ட உளநிலை. ஒரு பெரிய சமூகச் செயல்பாடு அந்த தனிப்பட்ட உளநிலையை கருத்தில்கொள்ள முடியாது. மேலும் இப்படிச் சொல்பவர்களில் மிகப்பெரும்பான்மையினர் இளமையில் பொன்னியின் செல்வன் வாசித்தபின் வேறெந்த நூலையும் வாசிக்காதவர்கள் என்பதையும் கவனித்திருக்கிறேன்.

பொன்னியின் செல்வன் சினிமாவாக ஆக்கப்படும்போது உருவாகும் பிரச்சினைகள் என்ன? எந்த ஒரு நாவலை சினிமாவாக ஆக்கினாலும் சில இழப்புகள், சில பெறுதல்கள் நிகழும். அவற்றைப் பற்றிய புரிதல் நம் சூழலில் விமர்சகர்களுக்குக் கூட இல்லை. அந்தப் புரிதல் இருந்தால் நாவலைப்போல சினிமா இல்லை என்பதுபோன்ற மேலோட்டமான விமர்சனங்கள் எழ வாய்ப்பில்லை.

உலகமெங்கும் சினிமாவாக ஆக்கப்பட்ட பல இலக்கியப் பெரும்படைப்புகள் உள்ளன. அவற்றிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று பொதுரசிகர்களுக்குரிய பிரபல சினிமாவாக எடுக்கப்பட்டவை. இன்னொன்று, கலைப்படமாக எடுக்கப்பட்டவை.

சினிமா நிபுணர்களுக்காக அல்ல, என்னைப்போன்ற ஆரம்ப சினிமா ரசிகர்களுக்காக சில உதாரணங்களைச் சுட்டிக்காட்டுகிறேன். பிரபல சினிமாக்களில் நாவல்கள் மிக வெற்றிகரமாகப் படமாக்கப்பட்டவை சில உண்டு. என் பார்வையில் சிறந்த உதாரணங்கள் டாக்டர் ஷிவாகோ(Doctor Zhivago), கான் வித் த விண்ட் (Gone with the Wind), இங்க்லீஷ் பேஷண்ட் The English Patientபோன்றவை. இலக்கியங்கள் கலைப்படங்களாக ஆவதன் சிறந்த உதாரணங்கள் அகிரா குரசோவாவின் ரான் (Ran) (ஷேக்ஸ்பியரின் கிங் லியர் ) சத்யஜித் ரேயின் பாதேர் பாஞ்சாலி.

இரண்டாவது வகை கலைப்படங்களில் இயக்குநருக்கு பெரிய சுதந்திரம் உண்டு. அவர் தன்னுடைய படைப்பை எடுக்க மூலநூலை பயன்படுத்திக் கொள்கிறார். மூலநூலுக்கு அவர் மறுவிளக்கம் அளிக்கிறார். மூலநூலில் தனக்குத்தேவையான பகுதிகளை மட்டும் எடுத்துக்கொள்கிறார். மொத்த கதையின் களத்தையே மாற்றி எடுக்கப்பட்ட சிறந்த சினிமாக்களும் உண்டு. அந்தக் களத்தில் மூலநூலாசிரியர் முக்கியமல்ல, இயக்குநரே முக்கியமானவர். அவை நூலின் சினிமாச் சித்தரிப்புகள் அல்ல, அவை நூலில் இருந்து உருவான தனிக் கலைப்படைப்புகள்.

பொதுரசிகர்களுக்காக எடுக்கப்படும் முதல்வகை சினிமாக்கள் என்ன செய்கின்றன என்று பாருங்கள். அவை ஏதேனும் ஒரு திரைக்கதை உத்தி வழியாக மிகப்பெரிய நாவலை சுருக்கமான அடர்த்தியான ஒரு வடிவத்துக்குள் கொண்டுவருகின்றன. டாக்டர் ஷிவாகோ சிறந்த உதாரணம். அப்படித்தான் நாவலை சினிமாவாக எடுக்கமுடியும். ஏனென்றால் சினிமா நாவலைச் சுருக்கியே ஆகவேண்டும்.

அவ்வாறு சுருக்கியபின் அந்நாவலின் மிக உச்ச தருணங்களை மட்டும் வைத்துக்கொண்டு அந்நாவலின் கதையோட்டத்தையும், உணர்வுநிலையையும் சொல்ல சினிமாக்கள் முயல்கின்றன. அப்போது காட்சிகள்கூட சுருங்கும். ஏனென்றால் நாவலில் ஒரு காட்சி பத்துபக்கம் இருக்கும். வர்ணனைகள், உணர்ச்சிநிலைகள், உரையாடல்கள் என அது நீளும். வாசித்து முடிக்கவே அரைமணிநேரம் ஆகும். சினிமாவில் ஒரு காட்சி அதிகம்போனால் நான்கு ஐந்து நிமிடங்களே ஓடமுடியும். ஒரு நல்ல சினிமா இயல்பாக வெறும் அறுபது காட்சிகளாலானது. ஆகவே காட்சிகளும் சுருங்கும். நாவலில் விரிந்து விரிந்து செல்லும் நிகழ்ச்சி சினிமாவில் காட்சிவடிவில் சுருக்கமாக சில நிமிடங்களில் நிகழ்ந்து மறையும்.

ஆகவே, சினிமா நாவலின் காட்சியை குறைக்கிறதா? ஆழமற்றதாக ஆக்குகிறதா? இல்லை. சினிமாவின் அழகியலே வேறு. அது வெறும்காட்சி வழியாக ஓர் ஆழத்தை உருவாக்குகிறது. நான் எழுதிய நான் கடவுள் சினிமாவுக்கு தாண்டவன் அறிமுகக் காட்சிக்கு திரைக்கதையில் இரண்டே இரண்டு பக்கம்தான் எழுதியிருந்தேன். அது சினிமாவில் ஆறு நிமிடம் ஓடியது. ஒரு பயிற்சிக்காக அந்தக் காட்சியை திரும்ப நாவல் வடிவுக்கு எழுதிப்பார்த்தேன். நம்ப மாட்டீர்கள், ஏறத்தாழ நாற்பத்தைந்து பக்கம் வந்தது. தாண்டவனின் அந்த வருகை, கெத்து, அவன் அந்த பாதாளக்கோயிலுக்குள் நுழைய நுழைய அவனுடைய மனநிலை  மாறிக்கொண்டே இருப்பது, உள்ளே இருக்கும் சிதைந்த மனிதர்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் இன்னொருவருடன் உள்ள உறவு, அவர்கள் தாண்டவனை கண்டதும் அடையும் விதவிதமான மனநிலைகள்… அதை வாசிக்க ஒரு மணிநேரம் ஆகும்.

சினிமா அளிப்பது அந்த காட்சியின் விரிவையும் ஆழத்தையும்தான். சுந்தரசோழர் படுத்திருக்கும் படுக்கையறையை கல்கி மிகச்சில சொற்களில் வர்ணித்துச் செல்கிறார். தரவுகளே அளிப்பதில்லை. நாம் நமக்குத் தெரிந்த வகையில் அதை கற்பனைசெய்து கொள்கிறோம். ஆனால் சினிமா ஒரு பெரிய சித்திரத்தை அளிக்கிறது. அந்த கட்டில், அந்த அறை, அதற்குள் இருக்கும் ஏவலர்கள், அவர்களின் ஆடைகள், அவர்களின் உடல்மொழி என அது அளிக்கும் நுணுக்கமான செய்திகளுக்கு அளவே இல்லை.

சினிமாவில் அந்த ஒரு நிகழ்வை, 3 நிமிடம் மின்னிப்போகும் ஒரு காட்சியை அமைப்பதற்கு பல லட்சம் ரூபாய் செலவாகும். பல நிபுணர்கள் கூடி, ஆராய்ந்து, வரைந்து, செட் போட்டு, வரைகலையில் விரிவாக்கம் செய்து, ஒவ்வொரு முகத்துக்கும் நடிகர்கள் தெரிவுசெய்து, அவர்களுக்கு ஒப்பனை செய்து, உடையலங்காரங்கள் செய்து, நடிக்கச்செய்து, வண்ணம் சரிபார்த்து, வெட்டி ஒட்டி, ஒலி சேர்த்து முழுமை செய்யவேண்டும். ஒரு முழுநாவல் எழுதும் உழைப்பு அந்த ஒரு காட்சிக்கே தேவைப்படும்.

ஒருவர் கல்கியின் நாலைந்து வரிகளில் இருந்து, அவருடைய கற்பனைக்கேற்ப உருவாக்கி வைத்திருக்கும் சுந்தர சோழனின் படுக்கையறையையே சினிமாவிலும் எதிர்பார்ப்பார் என்றால் அவர் சினிமா ரசிகரே அல்ல. சினிமா காட்டும் அந்தப் படுக்கையறையை மிக நுட்பமாக பார்த்து, அது காட்டும் அக்காட்சியில் இருந்து மிக விரிவாக மேலும் கற்பனை செய்பவரே சினிமாவுக்கு ரசிகர். அவருக்காகவே சினிமா எடுக்கப்படுகிறது. குழந்தைகள் அப்படித்தான் சினிமாவைப் பார்க்கின்றன. அந்தக் குழந்தைகள் சோழர்காலம் பற்றி, நம் கடந்தகாலம் பற்றி ஒரு கனவை அடைவதற்காகவே பொன்னியின் செல்வன் எடுக்கப்படுகிறது. எண்ணிப்பாருங்கள், நாமும் நம் சின்னவயசில் பார்த்த சினிமாக்களில் இருந்தே நமது மனச்சித்திரங்களை அடைந்திருக்கிறோம்.

சினிமாவை ‘குறைத்தலின் கலை’ (Art of minimalism) என்பார்கள். நாவல் என்பது ‘விரித்துரைத்தலின் கலை’ (Art of elaboration) என்பார்கள். இரண்டும் முற்றிலும் வேறுவேறு திசைகளில் செல்லும் கலைகள். நாவல் அனைத்தையும் விரித்து விரித்துச் சொல்லிச் செல்கிறது. ஒவ்வொன்றையும் வரலாறு, தத்துவம், நினைவுகள் எல்லாவற்றுடனும் இணைக்கிறது. நாவல் வாசிக்கும் அனுபவம் என்பது நாம் நமக்குள் விரிந்துகொண்டே செல்வதுதான்.

இன்றைய யுகத்தின் முதன்மைக்கலை நாவல் என்பது என் எண்ணம் – ஆகவே நான் நாவல் எழுதுகிறேன். நாம் வாழ்ந்துகொண்டிருப்பது துளித்துளியாக உடைக்கப்பட்ட உலகில். அலுவலகம், வீடு, தெரு, அரசியல் எல்லாமே நமக்கு தனித்தனி அனுபவ உலகங்கள். நாவல் அனைத்தையும் ஒன்றாக இணைப்பது. நாவல் மிகப்பெரிய ஒரு வலைபோல நம்முள் உள்ள சிந்தனைகள், கற்பனைகள், நினைவுகள் எல்லாவற்றையும் ஒன்றாக தொகுக்கிறது.

சினிமா நாவல் அல்ல. அது ஓர் அளவுக்குமேல் விரிந்தால் உடனே நாம் சலிப்படைவோம். யோசித்துப்பாருங்கள், அரைமணிநேரம் ஒருவர் பேசினால் கேட்டுக்கொண்டிருக்கிறோம். பத்துநிமிடம் சினிமா சரியாக நம்மை ஈர்க்கவில்லை என்றால் நெளிகிறோம். அதை சினிமாவில் Filmi time என்பார்கள். அது வெளியே உள்ள அதே காலம் அல்ல. அது மிகமிகச் செறிவூட்டப்பட்ட காலம். அதன் அடர்த்தி மிக அதிகம். சினிமாவில் பத்து நிமிடம் என்பது மிக மிக நீளம்.

ஏனெனில், சினிமா கனவுகளின் தர்க்கமுறை கொண்டது. கனவு சில கணங்களே நீடிக்கக்கூடியது. நீங்கள் பத்தாண்டுகளுக்கு முன் பார்த்து இன்றும் நினைவில் நீடிக்கும் சினிமாக்காட்சி ஒன்றை நினைவுகூருங்கள். மீண்டும் சென்று அந்தக்காட்சியைப் பாருங்கள். அது மிகமிகச் சிறிதாக, சில நிமிடங்களே மின்னி மறைவதாக இருப்பதைக் காண்பீர்கள். அந்தக் காட்சி உங்கள் நினைவில்தான் அவ்வளவு பெரியதாக ஆகியிருக்கும். அதுவே சினிமாவின் கலை.

நீங்கள் அந்தக் காட்சியை எந்த முன் எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் அது அந்த சிறிய பொழுதிலேயே உங்களுக்குள் ஆழமாக பதிந்துவிட்டிருக்கும். ஆனால் அதை ஒரு நாவலில் அல்லது நாடகத்தில் அந்தக்காட்சியை ஏற்கனவே நீளமாக பார்த்து, அது அப்படித்தான் என்று உறுதிசெய்துவிட்டு, அந்த சினிமாக்காட்சியை பார்த்தால் அது மிகச் சுருக்கமாக மின்னி மின்னி சென்றுவிட்டது என்றும், விரிவாக இல்லையே என்றும் தோன்றும்.

நாவல்களை சினிமாவாகப் பார்க்கும்போதுள்ள பெரிய சிக்கல் இதுவே. நாவலை வாசித்தவர்கள் பலர் அந்நாவலின் சினிமா வடிவைப் பார்த்து ‘சட் சட்னு முடிச்சிட்டான். நாவல்ல இன்னும் டீடெயிலா இருக்கும்’ என்பார்கள். அது சினிமா என்னும் கலைவடிவை அறியாததனால் சொல்வது.

சினிமாவை அறிந்தவர்கள் நாவலின் அந்த காட்சி சினிமாவில் எந்த அளவுக்கு காட்சிவடிவ செய்திகளை செறிவாகக் காட்டுகிறது என்பதையே கவனிப்பார்கள். வந்தியத்தேவன் கடம்பூர் கடைவீதி வழியாக குதிரையில் சென்றான் என்பது நாவலில் ஒரு வரி. ஆனால் சினிமாக்காட்சியில் அந்த கட்டிடங்கள், அந்த தெருவின் வியாபாரிகள், அந்த குதிரை என பலநூறு நுண் செய்திகள் உள்ளன. நல்ல சினிமா ரசிகன் முடிவே இல்லாமல் அவற்றை பார்க்கமுடியும்.

ஆகவே ஒரு நாவல் சினிமா ஆகும்போது அதன் நாவல் தன்மையை இழக்கிறது. அது இழப்பு. சினிமாத்தன்மையை அடைகிறது. அது பெறுமானம். நாவல் சினிமாவடிவில் விரிவையும் நீளத்தையும் இழக்கும். விவாதத்தன்மை இருக்காது. நீண்ட உரையாடல்கள் இருக்காது. மன ஓட்டம் இருக்காது. ஆனால் காட்சிவடிவ செய்திகளை பலமடங்கு கூடியிருக்கும். அவற்றிலிருந்து மேலும் கற்பனை செய்ய ஆரம்பித்தால் நாம் ஏற்கனவே வாசித்த நாவலே பலமடங்கு வளர்ந்திருப்பதை உணர்வோம்