Vaazhththup Paa (3 posts)

  • Profile picture of venkdhivakar venkdhivakar said 10 months, 3 weeks ago:

    பொன்னியின் செல்வன் பேரவை வாழ்த்துப் பா
    திவாகர்

    பொன்னியின் செல்வன் குழுமமிது
    அன்னையின் அன்புக் குடும்பமாம்
    பொங்கும் அன்பும் பாசமும்
    எங்கும் தெரியக் கிடக்குமாம்
    சொக்கத்தங்கம் போன்ற தெளிவும்அறிவும்
    இங்கே அத்தனை பேரிடமுமுண்டு
    மங்காத தோழமையும் பரிவும்கூட
    தங்குதடையின்றி வழங்கும்கூட்டமிது

    சரித்திரத்தின் பொக்கிஷங்கள் பலவும்
    சரியாக எடுத்துரைக்கும் கூட்டமிது
    சோழ பாண்டியனாகட்டும், அல்லது
    பழங்கால பல்லவ சேரனாகட்டும்
    அவர் காலத்து அரசாட்சிகளை
    அவாவுற ஆராய்ச்சியோடு அலசி
    அட்டவணையாய் காலகட்டத்தைக் காட்டி
    அட்டவீர தெய்வத்தலங்களைப் போல
    அத்தனை தலங்களின் அழகையும்காட்டி
    எத்தனையோ காலங்களாய் தர்மத்தின்காவலராய்
    வாழ்ந்த அரசர்முதல் ஆண்டிவரை
    வாழ்ந்து வீழ்ந்ததலைவர் வரலாறுகாட்டி

    சிற்பங்கள் காட்டி சிங்காதனம்பூட்டி
    கற்கோயில் ஆதாரங்களையும் காட்டி
    அக்கால கலைஞானியின் அற்புதமான
    பொற்காலச் செல்வத்தையும் காட்டி
    சிலைவழியே சிருங்கார ரூபத்தோடு
    கலைவண்ணக் காட்சியும் காட்டி

    தங்கத்தமிழோசை உலகெங்கும் பரவ
    சங்கத்தமிழின்பக் கவிதைகளைக் காட்டி
    எங்கே எம்தமிழுக்கு எங்கேயிணையென
    எங்கெங்கும் தேடினும் எமக்கிணையில்லையென
    தங்கமாய் வைரமாய் மாணிக்கமாய்
    மங்காத ஒளியாக தமிழைக்காட்டி

    கற்பனையோ கற்கண்டோ காதலழகோ
    பற்பலவிதமாய் படைக்கும் பாத்திரங்கள்தானோ
    எப்படித்தான் இக்கதையை படைத்தாரென
    தப்பாமல் வியக்கும் ரசிகனுக்காக
    சொக்கவைக்கும் நடையால் சுந்தரமாய்
    தங்குதடையின்றி எழுதும் கதையாளர்பலகாட்டி

    ஆணுக்கிங்கே பெண் நிகராமென
    ஆண்பிள்ளைச் சிங்கமெம் பாரதிவாக்கின்படி
    எல்லாத்துறைகளிலும் காலூன்றி வழிகாட்டி
    எல்லோருக்கும் இங்கே இடமுண்டென
    சிறப்பான செயல்களால் பயன்பாடுபலசெய்த
    பொறுப்பான பெண்மணிகள் தாமெனக் காட்டி

    கடலிலே நகரங்கள் புதைந்தாலென்ன
    கடும் வெள்ளம்தான் ஊரையழித்தாலென்ன
    காலத்தால் கலைகள் அழிந்தால்தானென்ன
    கோலமகள் சிற்பம்தான் சிதைந்தாலென்ன
    என்றெல்லாம் இல்லாமல் அழிந்ததவையாவும்
    இன்றெமக்கு மீட்டுத்தரும் அன்பர்களையும்காட்டி

    கோவில்களெல்லாம் கையால்கட்டிய கல்மண்டபமோ
    கோவில்களெல்லாம் இதயம் வடித்தஓவியமன்றோ
    இன்றளவும் இவையெம் மனதுக்காறுதலன்றோ
    இன்றிவை அழியாமல் யாம்காப்போமன்றோ
    காலமெனும் காலனுக்கிவை பலியாகாதென்று
    ஆலமரநிழலாய் கொடைதரும் நண்பரையும்காட்டி

    அறுபது ஆண்டுகள் ஆனால்தானென்ன
    ஆயிரம் ஆண்டுகள் ஆனால்தானென்ன
    அழியாத கதைக்கோலம் வடித்த
    எழில்பொங்கும் பாத்திரங்கள் இவையாம்
    அன்பான அருள்மொழியும் அவன்மனதுக்கு
    இன்பம் எப்போதும்தரும் வானதியும்
    எக்காலமும் மறவாத வந்தியத்தேவனோடு
    இக்காலமும் பேசும் குந்தவையும்குழலியும்
    எப்படித்தான் மனதைக் கொன்றாளோ
    எப்படித்தான் மனிதனைக் கொன்றாளோ
    இப்படியோரழகி எங்கேயும் கண்டதுண்டா
    அப்படியெல்லாம் பேசப்படும் நந்தினியும்
    உற்சாகத்துக்கு மறுபெயராம் ஆழ்வார்க்கடியானும்
    யாரிவனைக் கொன்றனரோ எப்படித்தான்
    யார்மூலம் யார் என்னசெய்தனரோவென
    பற்பலரும் காரணமென்னவென எப்போதும்
    இப்போதும் கேட்கப்படும் ஆதித்தகரிகாலனும்
    மணிமேகலையும், அநிருத்தரும் இன்னும்பல
    மணியான நாயகநாயகியரும் எத்தனையெத்தனையோ
    அத்தனையும் அவ்வப்போது நினைவில்வைத்து
    கதைவடித்த கல்கியையும் ஆங்காங்கேகாட்டிய

    இத்தனை சான்றோர் இக்களத்திலுண்டாம்
    அத்தனைபேரும் ஓரணியில் திரண்டனராம்
    பொன்னியின் செல்வன் என்றபேரவையை
    சென்னையிலே அமைத்துக் காத்தனராம்
    கன்னித்தமிழ்க்காவலராம் கல்கியின்பெயர் பாடி
    பொன்னித்தாயின் பெயர்சொல்லும் பேரவையாம்
    கலைகளின் காப்பகமாய் கற்பகவிருட்சமாய்
    எல்லைதாண்டிய உறவுகளுக்கோர் பிணைப்பாய்
    மண்ணின் மைந்தர்புகழ் பாடும்பேரவையாம்
    கண்ணின்மணிகளின் இருப்பிடமாம் இப்பேரவை

    அன்பான தோழமையே – ஊறும்
    அன்பினால் இணைந்த தோன்றல்களே
    வாழ்க பொன்னியின்செல்வன் பேரவை
    வாழ்க பொன்னியின்செல்வன் அன்பர்கள்கூட்டம்

  • Profile picture of abbasasm abbasasm said 10 months, 3 weeks ago:

    Dear Dhivakar sir

    Nice one

    abbas

  • Profile picture of sps10142004 sps10142004 said 10 months, 3 weeks ago:

    Thank you Dhiwakar Sir.

    Mentioned in the Group meeting that
    you have sent Vaazhthuppa,
    Dr. Sridhar & NDTV Vaidhyanathan have SMSed Greetings.

    Could not read as the print out was not handy.

    thanks for all your continued support.

    rgds/ sps

  • If you like this topic please share it with