I am just preparing you : So be prepared:
பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்தினம் படமாக எடுக்கிறார் என்று சொன்னதும் பல டிறேக்டோர்களுக்கும் அந்த ஆசை வந்துவிட்டது. மணி படம் எடுத்து முடிப்பதற்குள் நாம் எடுத்து முடித்துவிடலாம் என்று முடிவு செய்து, எனக்கு ஒரே போன் மேல் போன் போட்டு தொந்தரவு செய்தார்கள்.
அனைவருக்கும் தனித்தனியே திரைக்கதை எழுதி விட்டேன். சுருக்கம் உங்கள் பார்வைக்கு.
இயக்குனர் சங்கர்:
இந்தக் கதைக்கு சேந்தன் அமுதன்தான் ஹீரோ. பகலில் தேவாரம் பாடிக்கொண்டு, கோவிலுக்கு பூ கட்டிக் கொண்டிருக்கும் சேந்தன், இரவில் ரவி தாசனாகி பல சதி வேலைகளை செய்கிறான்.
ஏன்? அவன் படிக்க ஆசைப்பட்ட காந்தளூர் சாலைப் பள்ளியை சோழர்கள் எடுத்துக்கொண்டு அதிக கட்டணம் வசூல் செய்ததால் அவனால் படிக்க முடியவில்லை.
இறுதியில் அவனுக்கு மல்டிபுள் பெர்சநோளிட்டி டிசொர்தர் வந்து சோழ அரியணைக்குப் போட்டி போடுகிறான்.
படத்தின் பெயர் – கண்ணியன்
பாரதி ராஜா :
தஞ்சைக் கோட்டத்து அருண்மொழியும், ஆரூர்க் கோட்டத்து வந்தியத் தேவனும் நெருங்கிய நண்பர்கள். அருண்மொழியின் சஹோதரி குந்தவையை வந்தியத்தேவன் திருமணம் செய்து கொள்கிறான்.
ஒருநாள் அருண்மொழியின் குழந்தைக்கு குலதெய்வம் நிசும்பசூடனி கோவிலில் மொட்டை போடும்போது ஏற்ப்படும் ஒரு சிறிய வாய் தகராறில் இரு குடும்பங்களும் பிரிகின்றன. இரண்டு கோட்டங்களும் தான்.
பிறகு ஒரே கலவரம். இதற்கு இடையில் அருண்மொழி மகள் சின்ன குந்தவையும், வந்தியத்தேவன் மகன் விமலாதித்தானும் குடந்தை பள்ளியில் படிக்கும்போது காதலில் விழுகின்றனர்.
பிறகு இரண்டு கோட்டங்களும் மோதுகின்றன. ( எல்லா வீரர்களுக்கும் அருவால்தான் ஆயுதம்)
இறுதியில் பெரிய குந்தவை வெட்டுப்பட்டு இரண்டு குடும்பங்களையும் இணைக்கிறாள்.
படத்தின் தலைப்பு – சோழ சீமையிலே.
K .S . ரவிக்குமார்
தஞ்சாவூர் கோட்டத்து சபைக்கு கிழார் சுந்தர சோழர். சுத்துப்பட்டு 18 கோட்டமும் அவர் சொல்லுக்கு கட்டுப்படும். அவர் தீர்ப்புக்கு மேல் தீர்ப்பு இல்லை. ஆனால் அவர் வீட்டிலேயே ஒரு ஐம்பெரு குழு ( அதான் பஞ்சாயத்து)
அவருக்குப் பின் யார் கிழார் என்று அவர் மகன் ஆதித்த கரிகாலனும், அவர் சஹோதரர் மகன் மதுராந்தகனும் மோதுகிறார்கள்.
சுந்தரர் நடத்தும் குடவோலை தேர்தலில் மக்கள் ஆதித்தநையே தேர்ந்து எடுக்கிறார்கள்.
பகை வளர்கிறது. அப்போது ஆதித்தன் மர்மமான முறையில் கொல்லப்படுகிறான்.எல்லோரும் அருண்மொழியை கிழார் ஆக்க, அவனோ மதுராந்தகனை கிழார் ஆக்கிவிட்டு இலங்கை செல்கிறான்.
சுந்தரராக விஜயகுமார், செம்பியன் மா தேவியாக ஆச்சி மனோரமா நடிக்கிறார்கள்.
பெயர் – சின்ன சோழன், பெரிய சோழன்.
வெங்கட் பிரபு
ஒரே இரவில் கடம்பூர் அரண்மனையில் நடக்கும் கதைதான் இது.
ஆதித்த கரிகாலனாக S P B சரணும், வந்தியத்தேவனாக பிரேம்ஜியும், பழுவேட்டரயராக சம்பத்தும் நடிக்கிறார்கள்.
பெயர் – கடம்பூர்
கௌதம் மேனன்:
சோழ நாட்டின் தளபதி ஆதித்த கரிகாலன். அவர் ஒரு என்கவுன்ட்டர் ச்பெசியாளிஸ்ட். ஆனால் அவரையே என்கவுன்ட்டர் செய்து விடுகிறார்கள் பாண்டியர்கள். அந்த பாண்டியர்களை அருண்மொழியும், வந்தியதேவனும் என்கவுன்ட்டர் செய்வதுதான் கதை.
பெயர் – தாக்க தாக்க
செல்வராகவன்:
காஞ்சிக் கடிகைக்கு கல்வி பயில வருகிறான் பழயாரைக் கோட்டத்துக் கரிகாலன். கிராமத்திலிருந்து வரும் அவனுக்கு நாகரீகம் கற்றுத் தருகிறார் நெல்லை மா நகரத்து நந்தினி. அவள் நட்பைக் காதல் என்று கற்பனை செய்து கொள்கிறான் கரிகாலன். ஆனால் அவளோ மதுரை வீர பாண்டியனை காதலிகிறாள்.
கரிகாலன் பாண்டியன் தலைக் கொண்டு, நந்தினியை சேர நாட்டு மலைப் பகுதிக்கு கடத்திச் செல்கிறான்.
பெயர் – கடலில் விழுந்தேன்
ஹரி:
தஞ்சைக் கோட்டத்தை ஆட்டி வைக்கிறார் பழுவேட்டரையர். அவர் கொட்டத்தை அடக்க காஞ்சியில் இருந்து வந்திய தேவனை தளபதியாக அனுப்புகிறார் கரிகாலன்.
தஞ்சாவூர் வரும் வந்தியத்தேவன் – நான் தளபதி இல்லை தறுதலை என்று டயலாக் அடித்தபடியே control செய்கிறான்.
அவனுக்கும் தஞ்சை தளிக்குளத்து அர்ச்சகர் மகள் குந்தவைக்கும் காதல்.
அந்த ஊரில் நந்தினியக்கா என்று ஒரு பெண் ரௌடியும் உண்டு.
எல்லாரையும் தளபதி அடக்கி தஞ்சைஐ இஅல்புக்கு கொண்டு வருவதுதான் கதை.
இராம நாராயணன்
குந்தவைக்கு அண்ணன் கரிகாலன். தம்பி அருண்மொழி. அவளுக்கு வந்தியத்தேவனுடன் காதல். அந்த ஊரில் ஒரு மாளிகையில் வசிக்கும் ஒரு பெண் பேய் நந்தினி. அந்தப் பெண் பேய்யை பெண் என்று நினைத்துக் காதலிக்கிறான் கரிகாலன்.
நந்தினிப் பேய் அவனை கொன்று விடுகிறது.
இப்போது நந்தினி அருண்மொழியை பிடிக்க முயல்கிறது. வந்திய தேவனை முடக்கி விடுகிறது.
கிளைமாக்ஸ்இல் குந்தவை நிசும்பாசூதனி கோவிலில் காலப் பிடாரி, அதிச்ச பிடாரி, என்று 108 பிடாரி பாட்டு பாட, நிசும்பாசூதனி வந்து நந்தினிப் பேய் யைப் போட்டு தள்ளுகிறார்.