பெருவழுதி நாணயம் கண்டுபிடிப்பு: வரலாற்றில் இடம் பெறாதது ஏன்?
தி.நகர்: பாண்டியன் பெருவழுதி நாணயத்தை தினமலர் நாளிதழ் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டறிந்தார். இருந்தும், அந்த வரலாறு இன்னும் வரலாற்றுப் பாட நூல்களில் சேர்க்கப்படாமல் உள்ளது, என ரீச் பவுண்டேஷன் நிறுவனர் சத்தியமூர்த்தி பேசினார்.கோவில் கல்வெட்டுக்களில் எழுதப்பட்ட வரலாற்று தகவல்களை அறிந்து, அதனைமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் பல துறை சார்ந்தோருக்கு கல்வெட்டுக்கள் குறித்த பயிற்சியை ரீச் பவுண்டேஷன் வழங்குகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த அமைப்பின் சார்பில், கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் கல்வெட்டுக்கள் - ஒரு அறிமுகம் என்ற பயிற்சி வழங்கப்படுகிறது. மூன்று மாத கால பயிற்சியாக, இது வழங்கப்படுகிறது.இங்கு பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதிய வகுப்பு துவக்க விழா நேற்று சென்னையில் நடந்தது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் ராஜேந்திரன் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில், பயிற்சி முடித்த 23 பேருக்கு, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலயா பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்தியநாதன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ரீச் பவுண்டேஷன் நிறுவனர் சத்தியமூர்த்தி பேசியதாவது: கோவில் கல்வெட்டுக்களில் உள்ள வரலாற்று தகவல்களை, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, முந்தைய காலங்களில் கோவில்களில் இருந்து நகைகளை திருமணத்திற்கு வாங்கிச் செல்வது, பின் திரும்பப் பெறும் போது அவற்றின் எடையை சரி பார்ப்பது உள்ளிட்ட பழக்க வழக்கங்கள் பற்றிய தகவல்களை கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. பழமையான கோவில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அப்படி நடந்தால், கோவில் உள்ள ஒவ்வொரு கிராமமும் சுற்றுலா பகுதியாக மாறும். மேலும், பாண்டியன் பெருவழுதி நாணயத்தை, தினமலர் நாளிதழ் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டறிந்தார். இருந்தும், இதுவரை இந்த வரலாறு, வரலாற்றுப் பாட நூல்களில் சேர்க்கப்படவில்லை. இவ்வாறு சத்தியமூர்த்தி பேசினார். நிகழ்ச்சியில், கல்வெட்டுக்கள்பயிற்சி அளித்த வரலாற்று ஆய்வாளர் எஸ். ராமச்சந்திரன், இத்துறையில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
Courtesy: tamil.yahoo.com
Kalavathi Senguttuvan
I am thankful for my life and for all the people in it.