PS MEET on 5th August - Sunday 3-7 PM - நடந்தது என்ன?
  • பொன்னியின் செல்வர்களே,

    இன்று எனது வாழ்வின் வசந்தமான நாள்.

    பொன்னியின் செல்வர்களை கண்டு மகிழ்ந்த நாள்.

    பொன்னியின் செல்வர்களின் அரசரான சிவபாதசேகரனை கண்டு மகிழ்ந்து பேசிய நாள்.

    அன்புமிகுந்த அனுஷாவிடம் அளவளாவிய நாள்.

    சேரர் கோட்டையிலிருந்து வந்த ஸ்வேதா பேசக்கேட்ட நாள்.

    நண்பர் முருகானந்தத்தின் பெரோஸ்காந்தியை பற்றியும் குஷிவந்த சிங்கத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டநாள்.

    அகாய சூரர்கள் பலரின் வியப்பு மிகுந்த செயல்களை தெரிந்து கொண்ட நாள்.
    இன்னும் பல அறிஞர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் கண்டு கழித்த நாள்.

    இத்தனை பெரிய அறிஞர்களையும், ஞானிகளையும் ஒருங்கிணைத்த ராஜராஜனுக்கும், ராஜந்திர சோழருக்கும் நன்றி செலுத்திய நாள்.

    பல அலுவலக வேலைகளுக்கிடையில் பொன்னியின் செல்வனின் கூட்டத்திற்கு செல்ல முடியுமா அல்லது முடியாமல் போய் விடுமா என்று தயங்கிய போதிலும், சரித்திர ஆர்வம் காரணமாகவும், நேரமின்மையின் காரணமாகவும் உடுத்திய வேட்டியுடனும் அழுக்கு சட்டையுடனும் மனதில் ஆர்வம் பொங்க தியாகராய நகரில் ரோகினி இன்டர்னேஷனல் முதலில் மிகவும்அருகில் இருக்கும் அறுசுவை அரசரின் அரங்கத்துக்கு
    சென்ற போது அங்கு பொன்னியின் செல்வர்கள் அனைவரும் வந்திருந்தினர்.

    சிவபாதசேகரன் எனக்கு தங்க சால்வை அணிவித்து அறிமுகம் செய்த போது மனம் மகிழ்ந்து போனேன். அதன் பிறகு அன்புடன் கொடுத்த புத்தகமும் சாதரண எழுத்தாளனான என்னை மகிழ்வின் உச்சத்துக்கு கொண்டே போனது.

    கலந்துரையாடலின் போது காந்தளூர் சாலை கலமறுத்தற்கு ஒவ்வொருவரும் கொடுத்த விளக்கங்கள் எனக்கு இன்னும் நான்கு கதை எழுத விவரங்கள் கிடைத்து விட்டன.

    பார்த்திபன் கனவுக்கு முன்பு சரித்திர புதினம் முடித்த பிறகு, இந்த விவரங்களை வைத்து எத்தனையோ கதைகள் எழுத முடியும்.

    சேரர் கோட்டை பற்றி மிக விளக்கமாகவும், அருமையாகவும் பேசி அனைவரையும் திகைக்க வைத்தார்கள்.

    பெரோஸ் காந்தியைப் பற்றி இதுவரை தெரியாத விவரங்கள் தெரிந்தன.

    இராமாயண மாந்தர்கள் வழிபட்ட இடங்களை பற்றி இலக்கிய ஆதாரத்துடன் சொன்ன பெரும் பதவியில் இருக்கும் அன்பருக்கு எனது நன்றி என்றும் உரித்தாகும்.

    மிகுந்த அருமையான சுவையான உணவு. இதுவரை இத்தனை ருசியான சாம்பார் சாதத்தை நான் சாப்பிட்டதில்லை. விழாவின் சுவையோடு, உணவின் சுவையும் என்றும் மனதில் நிற்கும்.
    இத்தனை அருமையான ஏற்பாட்டை செய்த சிவபாதசேகரர் அவர்களுக்கும், அனுஷா அவர்களுக்கும், சுவையான விவாதத்தில் பங்கு பெற்றுவர்களுக்கும், யாளி புத்தகத்தை கொடுத்த சந்திராவுக்கும், மற்ற புத்தகங்களை அன்புடன் கொடுத்தவர்களுக்கும் எனது நன்றி என்றும் உண்டு.

    நாளை விழிஞம் இருக்கும் சேர நாட்டுக்கு பணியாற்ற செல்ல வேண்டிய எனது வாழ்வின் இந்த முக்கிய தருணத்தில் பொன்னியின் செல்வர்களின் அன்பும், பண்பும் என்னை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    ஐயா பொன்னியின் செல்வர்களே, எனது முத்துச்சிப்பி இன்னும் ஒரு மாதத்தில் தயாராகிவிடும். மீனவர்களின் வாழ்வையும்,பாண்டியர்களின் வரலாற்றையும் பின்னனியாகக் கொண்டு இந்த சரித்திரம் புதைந்த இந்தப் புதினத்தை தாங்கள் ஆதரித்து இந்த ஏழை எழுத்தாளனுக்கு உதவி புரிய வேண்டும்.

    அன்பர்களே எனது அடுத்த புதினமான பார்த்திபன் கனவுக்கு முன்னால் நடந்த சரித்திர நிகழ்வுகளின் கதைக்கும் என்றும் தங்களின் அன்பையும் ஆதரவையும் வேண்டும்

    டாக்டர் எல். கைலாசம்
    ஆசிரியர் மலர்ச்சோலை மங்கை, கயல், மணிமகுடம்

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters