பொன்னியின் செல்வன் குழுமமிது அன்னையின் அன்புக் குடும்பமாம் பொங்கும் அன்பும் பாசமும் எங்கும் தெரியக் கிடக்குமாம் சொக்கத்தங்கம் போன்ற தெளிவும்அறிவும் இங்கே அத்தனை பேரிடமுமுண்டு மங்காத தோழமையும் பரிவும்கூட தங்குதடையின்றி வழங்கும்கூட்டமிது
சரித்திரத்தின் பொக்கிஷங்கள் பலவும் சரியாக எடுத்துரைக்கும் கூட்டமிது சோழ பாண்டியனாகட்டும், அல்லது பழங்கால பல்லவ சேரனாகட்டும் அவர் காலத்து அரசாட்சிகளை அவாவுற ஆராய்ச்சியோடு அலசி அட்டவணையாய் காலகட்டத்தைக் காட்டி அட்டவீர தெய்வத்தலங்களைப் போல அத்தனை தலங்களின் அழகையும்காட்டி எத்தனையோ காலங்களாய் தர்மத்தின்காவலராய் வாழ்ந்த அரசர்முதல் ஆண்டிவரை வாழ்ந்து வீழ்ந்ததலைவர் வரலாறுகாட்டி
சிற்பங்கள் காட்டி சிங்காதனம்பூட்டி கற்கோயில் ஆதாரங்களையும் காட்டி அக்கால கலைஞானியின் அற்புதமான பொற்காலச் செல்வத்தையும் காட்டி சிலைவழியே சிருங்கார ரூபத்தோடு கலைவண்ணக் காட்சியும் காட்டி
தங்கத்தமிழோசை உலகெங்கும் பரவ சங்கத்தமிழின்பக் கவிதைகளைக் காட்டி எங்கே எம்தமிழுக்கு எங்கேயிணையென எங்கெங்கும் தேடினும் எமக்கிணையில்லையென தங்கமாய் வைரமாய் மாணிக்கமாய் மங்காத ஒளியாக தமிழைக்காட்டி
ஆணுக்கிங்கே பெண் நிகராமென ஆண்பிள்ளைச் சிங்கமெம் பாரதிவாக்கின்படி எல்லாத்துறைகளிலும் காலூன்றி வழிகாட்டி எல்லோருக்கும் இங்கே இடமுண்டென சிறப்பான செயல்களால் பயன்பாடுபலசெய்த பொறுப்பான பெண்மணிகள் தாமெனக் காட்டி
கடலிலே நகரங்கள் புதைந்தாலென்ன கடும் வெள்ளம்தான் ஊரையழித்தாலென்ன காலத்தால் கலைகள் அழிந்தால்தானென்ன கோலமகள் சிற்பம்தான் சிதைந்தாலென்ன என்றெல்லாம் இல்லாமல் அழிந்ததவையாவும் இன்றெமக்கு மீட்டுத்தரும் அன்பர்களையும்காட்டி